திங்கள், 25 ஜூலை, 2016

தெரு நாயும் ஊழையும் - குமரி ஆதவன்

தெரு நாயும் ஊழையும்
- குமரி ஆதவன்

அது -
ஊர்தலைவனின் அடிவருடி நாய்;
தலைவனின் எச்சிலைச் சாப்பிடுவதால்
குரைக்கக்கூடத் தெரியாத நரைநாய்
தலைகால் புரியாமல் துள்ளும்
சளுவாய் வடித்தபடி ஊழையிடும்
திடீரென சாக்கடையில் புரளும்
ராத்திரியில் ஊழையிடத் தெம்பில்லாமல் மூணும்
புண்ணாகிச் சீழ்வடியும் வாலை அசைத்தபடி
தெருக்கோடியில் மல்லாந்து கிடக்கும்.


தெருநாய் கூட்டம் வந்தால்
மெல்ல எழுந்து பின்னால் நடக்கும்
அவ்வப்போது கடி பிடிக்கும்
மீண்டும் அணைத்துச் சுகம்காணும்;
மனிதர்கள் வந்தால் முயன்று உறுமும்
மகான்களைக் கண்டால்
ஒன்று சேர்ந்து துரத்தும்
அச்சமின்றி எதிர்த்தால் பதறி ஓடும்.

எப்போதும் ஊழையிடுகிற
சளுவாய் வடிக்கிற
கண்ணைத் துருத்துகிற அந்நாயை
கிறுக்குப்பிடித்து அலைவதாய்த்தான் ஊரார் நினைத்தனர்.

ஒரு நாள் ...
தலைவனின் தலைவன் வந்தான்
ஆள் தெரியாத அல்பநாய்
சளுவாய் வடித்தபடி ஊழையிட்டுக் கொண்டே
முன்னால் சாடிப் போனது.
ஏற்கனவே
ஊர்கோடியில் கூட்டம்போட்டு குரைத்தநாய்
மீண்டும் தன்னைக் கடிக்கப்போவதாய் எண்ணி
நாட்டுத்துப்பாக்கியால் சுட்டான்
குறி தவறவில்லை.

கபடப் பாம்பு
- குமரி ஆதவன்

ஏற்கனவே
பலரைத் தீண்டியக் கபடப்பாம்பு
ஒருநாள் எலியைத் துரத்தியது
அச்சப்பட்டுப்போன எலி
கறையான் புற்றுக்குள் தஞ்சமடைந்தது;
இரையுள்ள இடத்தில் சாய்ந்துவிடும் பாம்பு
புற்றுக்குள் மெல்ல நுழைந்து
அகோர பசியோடு
எலியைத் தின்று ஏப்பம்விட்டது.
மறுநாளில் ...
மெதுவாய் புற்றுக்குள்ளிருந்து தலை நீட்டியது ...

இடத்திற்கு ஏற்றார்போல்
நெழிவதையும் குழைவதையும்
காலில் விழுதலையும்
குழி தோண்டுதலையும்
குணமாய்க் கொண்ட விஷப்பாம்பின் கதை
பலருக்கும் தெரியவில்லை;
ஏமாறுதலையே வாழ்வாக்கிக்கொண்ட
பாமரக்கூட்டம் பாலூற்றி வளர்க்கிறது!


நான் மட்டும் அழுகிறேன் ...
ஊருக்காகவா?
பக்தருக்காகவா?
வழிப்போக்கருக்காகவா?
இல்லவே இல்லை.

பெரிய பூசாரிக்காக!

கலப்பை - குமரி ஆதவன்

கலப்பை 
-  குமரி ஆதவன்

ஈரேழு மாடும் கலப்பையும் வைத்திருந்தார் தாத்தா.
வீடுபோல் நீண்டு கிடக்கும் மாட்டுத்தொழுவத்தில்
கலப்பையும் மரமும் வைக்க அறையொன்று இருந்தது
புரட்டாசி பொறந்தா தாத்தா குசியாயிடுவார்
கலப்பையை தோளில் சுமந்தபடி
மாட்டை ஓட்டிக்கொண்டு மார்பு விரித்து நடப்பார்.
வேட்டியின் முந்தியைச் சுருட்டி
கால்களுக்கிடையே கொண்டு சென்று
பின்னிடுப்பில் குத்துத்தார் செருகும்போது
வலிமையான கால்கள் உழைப்பை உலகுக்குச் சொல்லும்.
மாட்டைப் பிடித்து களியக்குச்சிக்குள் கழுத்து இருக்குமாறு
கலப்பை நுகத்தில் பூட்டாங்கயிறால் கட்டுவார்.
கலப்பையின் யாக்காலை
சுள்ளாப்போடு சேர்த்து வடத்தால் கட்டிவிட்டு
கலப்பைக் குத்தியில் பழபழவென்று மின்னும்
கொழுவைத் தடவிப் பார்ப்பார்.
மேளியைப் பிடித்து அழுத்தியபடி
டுர்ர்..டுர்ர்..டுர்ர்...என்று ஓசை எழுப்ப,
மாடு கலப்பைக்குத்தியை இழுத்தபடி நடக்கும்.
வயலின் ஒரு ஓரத்தில் துவங்கி சால் பிரித்து உழ,
முதல் வட்டம் விழும்போதே
பூமித்தாய் இதழ் மலர்த்திச் சிரிப்பாள்.
ஒரு சால் முடிந்ததும் புதிய சால் போடுவார்.
எந்த இடமும் விடுபடாமல் சால்பிரித்து உழுவது
அதிசயமாய் இருக்கும்.
உழுது முடித்து மரமடிக்க தயாராய்,
கலப்பைக் குத்தியை மாற்றிவிட்டு
மரத்தின் குறுங்காவளையத்தை
வள்ளக்கையோடு இணைப்பார்.
மரமடித்து முடித்தால்
வயல் குளம்போல் காட்சி தரும்.
தயாராய் நிற்கும் தாய்மார்கள் நாற்றுநடத் துவங்குவர்.
நிலம் பச்சைப் பட்டுடுத்தி சிரிக்கும்போது
வாளிநிறைய கஞ்சியை உறுஞ்சியபடி
வாய்திறந்து சிரிப்பார் தாத்தா.
இப்போது தாத்தாவும் மாட்டுத்தொழுவமும்  இல்லை
நெல்நடவு நிறுத்தி ஆண்டு பலவாயிற்று
காட்சிப்பொருளா இருக்கும் கலப்பையில்
ரப்பர்சீட் காயப்போடுவா வீட்டம்மா!


பத்தாயமும் பாச்சா பல்லிகளும்
- குமரி ஆதவன்
தாத்தாவைப்போல்
விளைந்து கறுத்த பலாமரத்தில்
பத்தாயம் செய்து
அப்பாக் கல்யாணத்துக்குப் பரிசு கொடுத்தார்
வயல் அறுத்து தலையடி நெல்லை உலர்த்தி
ஆனி ஆடி மழை காலத்திற்கென்று
பத்தாயத்தில் போட்டு வைப்பார் அப்பா!

அப்பாவுக்கு பத்தாயம் ரெம்பப் பிடிக்கும்
இரவு தூக்கமும் பத்தாயத்து மேலத்தான்.
அப்பா நெஞ்சுமேல படுத்துக் கதகேட்டா
அறிவும் வளரும் அயர்ந்த தூக்கமும் வரும்.
காலையில, நெல்லை ஈரமாக்கிட்டதா
அம்மாவின் சத்தமும் கேட்கும்.
இந்தப் பத்தாயத்துக்குக் கத பலதும் உண்டு.

எனக்கு அப்போ எட்டு வயசிருக்கும்
ஒருநாள் பெரியம்மை நோய்க்குத் தடுப்பூசிப்போட
சுகாதார அலுவலர் வந்தார்
அவரை உருக்குத்துக்காரர் என்பதே வழக்கம்.
வீட்டில் யாருமின்றி அண்ணனும் நானும்
நடுங்கியபடி இருந்தோம்
உருக்குத்துக்காரர் அருகில் வருவதற்குள்
கையைப்பிடித்து இழுத்தான் அண்ணன்.
ஓடமுடியாமல் தயங்கியதும்
உருக்குத்து படாமல் காப்பாற்ற
புதிய வழியொன்று செய்தான்.
பாதி நெல்நிறைந்து கிடந்த பத்தாயத்திற்குள் 
இறங்கச் சொல்லி கால்களை மடக்கி உட்காரவைத்தவன்
பத்தாயத்தை மூடி அதற்குமேல் ஓலைப் பாயை விரித்துவிட்டு
வடக்குவாசல் வழியே ஓடிப்போனான்.
மூச்சு வாங்க இயலாமல் நான் திணற
உருக்குத்துப் பயம் எனைத்தழுவ
கீறல் விழுந்திருந்த பத்தாய இடையில்
மூக்கை வைத்தபடி வேர்த்திருந்தேன்.
ஒருசில நிமிடங்களில் உருக்குத்துக்காரர் வந்தார்.
யாருமில்லையா எனச் சப்தமிட்டார்.
வீட்டிற்குள் ஏறிய அவரது காலடிச்சத்தம்
என் இதயத்துடிப்பை அதிகமாக்கியது
இருந்தாலும் அசையவில்லை.
உருக்குத்துக்காரர் அடுத்தவீட்டிற்குப் போனார்.
உள்ளே இறங்கிய எனக்கு வெளியேவரத் தெரியவில்லை.

கால்மணி நேரத்தில் குளிக்கப்போன அக்கா வந்தாள்.
தம்பி ... தம்பி ... என்றாள்.
அக்கா பத்தாயத்துக்குள்ள இருக்கேன் எனச் சப்தமிட்டேன்.
ஏதோ குரல்கேட்டு பத்தாய அறைக்குள் வந்தவள்
என் முனகல்கேட்டு பாய்நீக்கித் திறந்தாள் பத்தாயத்தை.
ஒரு பூதத்தைப்போல் நான் வெளியே வந்தேன்.
மூச்சை நீட்சியாய் விட்டபடி
உருக்குத்துக்காரன் போய்டானா என்றேன்.
உருக்குத்துக்காரனுக்குப் பயந்து
இப்ப உசுரு போவஞ்சுதே  என்று அணைத்துக்கொண்டாள்.
இப்போது நினைத்தாலும் உசுரு துடிக்கத்தான் செய்கிறது.

இப்போ -
ரெடிமேடு சாப்பாடு எப்போதும் கிடைப்பதால்
நெல்லுபோட்டப் பத்தாயத்தில் நெல் இல்லை.
பல்லியும் பாச்சாயும் கூடுகட்டி வாழுகிறது
ஏகதேசம் எங்கநாடும் எங்கமனசும் அப்படித்தான்

ஏகாதிபத்தியத்தின் குப்பைத்தொட்டிகளாக.!

செவ்வாய், 19 ஜூலை, 2016

வெற்றியின் இருபடிகள்

வெற்றியின் இருபடிகள்
                                                                                  - குமரி ஆதவன்
                பிறர் மீது கொள்வது நம்பிக்கை; தன் மீது கொள்வது தன்னம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் மனிதனின் ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
                ஜீரணமாகும் என்ற நம்பிக்கையில் தான் சாப்பிடுகிறோம்; உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தான் சுவாசிக்கிறோம்; எழுவோம் என்ற நம்பிக்கையில் தான் உறங்குகிறோம்.
                மனைவியை நம்பாதவன் எப்படி அவளோடு ஒரே வீட்டில் வசிக்க முடியும்?
                நம்பிக்கை தகர்ந்து போகின்ற போது அச்சம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும். தன்னோடு இருப்பவர்களை நம்ப மறுக்கும் போது, கொன்று போடுவார்களோ என்ற அச்சம் ஆட்டிப் படைக்கும். அதற்குப் பிறகு எப்படித் தூக்கம் வரும்?
                நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் நம்பிக்கையின் வெளிப்பாடு தான். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தான் தேர்தலில் நிற்கிறோம்; தேர்வு எழுதுகிறோம். பின் எப்படி தோல்வி வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்,
                இங்கு தோல்வி அடைபவர்களே கிடையாது.  நான்கு வாக்குகள் பெற்றிருப்பவன்  கூட நான்குபேரின் மனதில் வெற்றி பெற்றிருக்கிறான். முதலிடத்திற்கு முன்னேறுகிற முயற்சிதான் இனி தேவை!
                நூற்றுக்கு முப்பது மதிப்பெண்களைப் பெற்றவன் கூட முப்பது மதிப்பெண்களுக்கான கேள்விகளை வென்றவன் தான். சமூகம் ஏற்படுத்தியிருக்கிற இலக்கை நோக்கி முன்னேற முயற்சி செய்வது தான் அடுத்தகட்ட வேலை!
                “நம்பிக்கை என்ற உணர்வு இறைவனால் அருளப்பட்ட அன்புக்கயிறு. இந்தப் அன்புக் கயிறு உலகத்தில் உள்ள அனைத்தையுமே ஒன்றையொன்று பிணைத்து நிற்கிறதுஎன்கிறார் சுவாமி விவேகானந்தர்.    
                உலகில் உலாவந்த ஒவ்வொரு புரட்சியும் சில மனிதர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடுகள் தான்.   
                மகாத்மா காந்தி இந்தியாவுக்கு விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையில்தான் தன் அகிம்சைப் போராட்டத்தைக் துவக்கினார்ஒவ்வொரு வீரனும் நம்பிக்கையயோடு தான் போர் புரிகிறான்; நம்பிக்கை இழப்பவன் அச்சப்பட்டுப் பின்வாங்குகிறான்.
                “அகிம்சை என்று நான் கூறுவதற்கு அடிப்படையே பரஸ்பர நம்பிக்கைதான். ஒரு விரோதியை விரோத மனப்பான்மையினால் வென்றுவிட முடியாது. அவ்வாறு தற்காலிகமாக நாம் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிரந்தரமாக இருக்காது. ஒரு விரோதியை அவன் மீது கொள்ளும் நம்பிக்கையினாலேயே வென்று விட முடியும். நம்பிக்கை என்று நான் கூறுவதை அன்பு என்றும் பொருள் கொள்ளலாம்என்கிறார் மகாத்மா காந்தி.
                இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய வள்ளுவரும் கூட,
                “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
                நன்னயம் செய்து விடல்”  என்கிறார்.
                “கடவுளை நம்ப மறுப்பவன் தன்னையும், சக மனிதர்களையும் நம்ப மறுக்கிறான்என்கிறார் கபீர் தாசர்.
                எவ்வளவு தான் உடல் வலிமை பெற்றிருந்தாலும், தன்னையும் சக மனிதனையும் நம்பாதவன் வாழ்க்கை அச்சம் நிறைந்ததாகவும், உலகத்திற்கு பயனற்றதாகவும் தான் அமையும்.
                நம்பிக்கை என்ற படிக்கட்டில் ஏறி தன்னம்பிக்கை என்ற உச்சியை அடைபவன்தான் வெற்றி மகுடத்தைத் தரிக்க முடியும். தன்னம்பிக்கை இல்லாதவனால் தன்னையும் நேசிக்க முடியாது; பிறரையும் நேசிக்க இயலாது.
                கண்களே இல்லாத சுரேஷ் குமார் என்பவர் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் ஆங்கிலத்துறை போராசியராக உள்ளார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சனாதிபதி விருதைப் பெற்றிருக்கிறார்.
                இரு கால்களையும் குழந்தைப் பருவத்திலேயே இழந்த மாசிலாமணி அவர்கள் இந்தியன் வங்கியில் காசாளராகப் பணியாற்றுகிறார். இவருக்கு சனாதிபதி விருது அளிக்கப்பட்டபோது சக்கர நாற்காலியில் செல்ல மறுத்து தரையில் ஊர்ந்து சென்றே விருதினைப் பெற்றுக் கொண்டார். மக்கள் வியந்தனர்; தன்மைபிக்கையோடு ஊர்ந்து சென்று விருது பெற்ற இவரை உலகமே உற்று நோக்கியது!
                இவர்களின் வெற்றிக்குக் காரணமென்ன? தன்னம்பிக்கை .... தன்னம்பிக்கை!
                வெற்றியாளர்களை சந்தித்துக் கேளுங்கள். அவர்கள் ஒரே நாளில் இந்த வெற்றியைப் பெறவில்லை. எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்டிருப்பார்கள்;எத்தனையோ இழப்புகளை சந்தித்தி ருப்பார்கள். ஆனால் எந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழந்து சோர்ந்து உட்கார்ந்திருக்க மாட்டார்கள்.
                மாவீரன் பகத்சிங் தூக்குக் கயிற்றை முத்தமிடும் போதுகூட, ‘இந்தியா சுதந்திரம் அடையும்; அதற்காக பல்லாயிரம் பகத்சிங்குகள் உருவெடுப்பார்கள்என்று நம்பினான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை.
                நம் கண்களுக்கு முன் எத்தனையோ பேர் தன்னம்பிக்கையோடு வெற்றியாளர்களாக பவனி வருகிறார்கள்.
                பலமுறை விபத்துகளைச் சந்தித்தவர்கள் இன்றும் நம்பிக்கையோடு சாதனை புரிகிறார்கள்.
                சிலர் எப்போதும் தங்களைப் பற்றியே குறைகூறிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் தான் பிறந்தேனோ? என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் உயிரோடு இருப்பதே பூமிக்குப் பாரம் தான்என்பார்கள்.
                இத்தகையவர்களை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள் வாழ்நாள் முழுக்க நோயாளிகளாகவே இருப்பார்கள்;எதையும் சாதிக்காத நடைபிணங்களாகவே நடமாடுவார்கள்.
                “தன்னம்பிக்கை இல்லாத மிருகம், பறவை போன்ற உயிரினங்கள் இருப்பதாக இதுவரை எந்த உயிரியல் அறிஞரும் கூறியதாக நான் கேள்விப்பட வில்லை. துரதிருஷ்ட வசமாக தன்னம்பிக்கை இல்லாதவர்களை மனித இனத்தில் மிகவும் அதிகமாகக் காணமுடிகிறதுஎன்கிறார் மா. பொ.சிவஞானம் அவர்கள்.
                நீ குணமாகிவிடுவாய் என்கிறார் மருத்துவர். அவன் குணமாகி விடுகிறான். இங்கு மருந்தைவிட அருமருந்து அவன் கொண்ட நம்பிக்கை!
                எனக்குத் தெரிந்த ஒரு நோயாளி ஒரு போலி வைத்தியரிடம் போனார். அவரிடமிருந்து பணம் பறிப்பதற்காக போலி வைத்தியர், இந்தநோய் குணமாவதே கடினம். ஐம்பதாயிரம் தந்தால் நான் தீர்க்க முயற்சி செய்கிறேன் என்று பாதி பணமும் வாங்கினார். ஒரு வாரத்தில் நோயாளி இறந்து போனார்!
                ஆனால் அதே நோய், அதைவிட மோசமான நிலைமையில் இன்னொருவர். மருத்துவரையும் மனநோய் மருத்துவரையும்  சேர்த்துப் பார்த்தார். ஒருவர் மருந்தையும் இன்னொருவர் நம்பிக்கையையும் ஊட்டினார். நோய் தீர்ந்து இன்று அவர் வேலைக்குப் போகிறார்!
                இது தான் நம்பிக்கையின் சக்தி; தன்னம்பிக்கையின் வெற்றி!
                ஒருவன் அடைகின்ற தோல்விக்குக் காரணம் திறமையின்மை அல்ல; தன்னம்பிக்கை இன்மைதான்.  தன்னால் இதை செய்து முடிக்க இயலும் என்று துணிவுடன் செயலில் இறங்கினால் என்றேனும் ஒரு நாள் வெற்றி நம் காலடியில் வந்து விழும்.
                200 முறைக்கு மேல் தன் சோதனையில் தோல்வியுற்றும் தன்னம்பிக்கையை இழக்காமல் போராடியதால் மின்விளக்கைக் கண்டு பிடித்தார் தாமஸ் ஆல்வா எடிசன். இத்தனை முறை தோற்று விட்டீர்களே இனி மின்விளக்கைக் கண்டு பிடிக்க முடியாது இல்லையா?” என்று கேட்டவர்களிடம் எடிசன் கோபத்தோடு சொன்னார்,  “எப்படி செய்தால் விளக்கு எரியாது என்பதற்கு இருநூறுக்கு மேல் காரணங்களை கண்டுள்ளேனேயொழிய நான் தோற்றுப் போகவில்லை.என்றார். ஆயிரத்து எண்பத்து நான்கு கண்டு பிடிப்புகள் இன்று எடிசனை புகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் தன்னம்பிக்கைதான்.
                பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் சிலர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு மாணவன் மட்டும் வெள்ளை மாளிகைக்குள் நின்று கொண்டிருந்த சனாதிபதி கெனடியை உற்று நோக்குகிறான். என்ன வேண்டும் என வினவுகிறார் கெனடி.. என்றாவது ஒரு நாள் அமெரிக்காவின் சனாதிபதியாகி இந்த வெள்ளை மாளிகையில் உலா வருவேன்என்றான். கெனடியால் வியப்போடு பார்க்கப்பட்ட அந்த மாணவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சனாதிபதியான பில் கிளிண்டன்.
                ஆறாம் வகுப்பில் படிக்கும் போது ஒரு மாணவன் சொன்னான் ‘I will rule Italy’. உடனே எல்லோரும் இத்தாலியை ஆள போற மூஞ்சியைப் பாரென்று கேலி பேசினார்கள். அவன் தான் இத்தாலியின் சர்வதிகாரி முசோலினி. எட்டு வயதில் பிரான்ஸ் நாட்டில் ஒரு சிறுவன்,  ‘அம்மா உன் மகனைப் பற்றி நீ கவலைப்படாதே அவன் பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி  என்றான். அவன் வேறு யாருமல்ல      முடியாது என்ற வார்த்தை என் அகராதியிலேயே இல்லைஎன்ற மாவீரன் நெப்போலியன் தான்.
                உயர்ந்த லட்சியத்தை மனத்தில் இருத்தி அதை அடைந்தே தீருவது என்று செயல்பட்டால், போராடினால் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தானே வந்து சேரும்.
                விறகு வெட்டியின் மகன் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க சனாதிபதியானதும், செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் ஸ்டாலின் ரஷ்ய அதிபரானதும், வீடு வீடாக தினசரி பத்திரிகைப் போட்டு அரசு பள்ளியிலேயே தமிழ்வழியில் படித்து அறிவியல் மேதையான அப்துல் கலாம், இன்று இந்தியாவின் சனாதிபதியாக உயர்ந்துள்ளதும் தன்னம்பிக்கையாலும் அதனால் விளைந்த விடாமுயற்சியாலும் தான்!
                தன்னம்பிக்கை இல்லாதவனை கடவுளே புறக்கணித்து விடுவார்.
                விவிலியத்தில் இடம் பெற்றுள்ள தாவீதிடம் இருந்தது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். சிறுவனென்றோ, கோலியாத்தை வீழ்த்த முடியாதென்றோ அவர் அவநம்பிக்கை கொள்ளவில்லை. அதுபோல் மகாபாரதத்தில் பாண்டவர்களிடம் இருந்த வீரர்களோ  குறைந்த எண்ணிக்கை. ஆனால் பெருமளவில் இருந்தது தன்னம்பிக்கை.
                படிக்கிற மாணவன் தன்னால் படிக்க முடியும் என்று தன்னம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
                ஆராய்ச்சி செய்கிறவன் தன்னால் புதியன கண்டு பிடிக்க இயலும் என எண்ண வேண்டும்.
                பெண்கள் எல்லாம் ஒரு காலத்தில் சமையலறையிலும் கட்டிலறையிலும் மட்டுமே இருக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது. இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது.
                அவர்களும் தன்னம்பிக்கை பெற்றார்கள். எழுச்சியோடு வீட்டிற்கு வெளியில் வந்து கல்வி கற்றார்கள்; தைரியத்தோடு வேலைக்குச் செல்கிறார்கள்.
                இன்று சாதாரண கடைகள் துவங்கி ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பென்று அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக நின்று அசத்துகிறார்கள்.
                நான் மணலிக்கரை மரியகொரற்றி பள்ளியில் மாணவனாக பயிலுகின்ற போது பத்து பெண்களுக்கு மேல் அங்கு ஆசிரியையாக பணிபுரிய வில்லை. இன்று சுமார் எண்பது பேரில் ஐம்பது பேருக்கு மேல் பெண்களே ஆசிரியைகளாக பணி செய்கிறார்கள். பத்து வருடம் தாண்டினால் பத்து சதம் கூட ஆண்களுக்கு கிடைக்காது என்பது நாளைய நிஜம்.
                ஆண் கற்றால் அவன் மட்டும் பயனடைகிறான். பெண் கற்றால் குடும்பமே பயனடையும் என்பார்கள். சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் தன்னம்பிக்கையோடு எழவில்லை என்றால் சமூகம் வீழ்ந்திருக்கும்.
                இந்த நிலை எப்படி உருவானது? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். தங்கள் வாழ்க்கை மீதும் திறமை மீதும் பெண்கள் கொண்ட தன்னம்பிக்கை!
                தன்னம்பிக்கையோடு ஊறுகாய் வியாபாரம் செய்தவன் லட்சாதிபதியாகியிருக்கிறான்.
                விடா முயற்சியோடு கட்டிடத் தொழில் கற்றவன் ஊர் முழுக்க பெயரோடும் புகழோடும் செல்வத்தோடும் வாழுகிறான்.
                என் சகோதரர்  ஒரு மேஜை நாற்காலியைக்  கொண்டு தனது கட்டிட வரைபடப் பணியைத் தொடங்கினார். இன்று சொந்தமாக ஐ.டி.ஐ. நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தன்னம்பிக்கையும், ஓயாத உழைப்பும் தான் இந்த உயர்வுக்குக் காரணம்!
                எனக்குத் தெரிந்த இன்னொரு நபர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மூன்று ரப்பர் கம்புகளை பிணைத்துக்கட்டி அதில் வாடகைத் தராசு ஒன்றை தொங்கவிட்டபடி சாலையோரத்தில் தென்னை ஈக்கில், ரப்பர் கொட்டை வாங்கிக் கொண்டிருந்தார். இன்று மூன்று கடைகளை நிர்வகிப்பவராக தன் மக்களையும், மனைவியையும் பொருளாதார சிக்கல் இல்லாமல் மகிழ்வோடு வாழவைத்துக் கொண்டுள்ளார். எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தும் அவர் தன்னம்பிக்கையைக் கைவிடவில்லை.
                “இளைஞர்களே! நம்புங்கள்! நீங்கள் மகத்தான சாதனைகள் புரியப் பிறந்தவர்கள். உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க இதுவே உரிய தருணம்எனகிறார் வீரத்துறவி விவேகானந்தர்.
                யானையின் பலம் தும்பிக்கையில் இருக்கிறது; மனிதனுடைய பலம் தன்னம்பிக்கையில் இருக்கிறது.!

                ஆகவே, நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் வாருங்கள்! வளருவீர்கள்!!

KAMARAJAR

தாழக்கிடந்தோரை தற்காத்துத் தூக்கியவர் காமராசர் - எழுத்தாளர் குமரி ஆதவன்
“மனிதர்கள் பல காரணங்களுக்காகப் புகழப்படுகிறார்கள். இந்தப்புகழ் யாருக்கு நிலைத்து நிற்குமென்றால், தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களுக்கு மட்டும்தான். இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்து வரலாறாய் நிற்கிறார் காமராசர். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வி வளர்ச்சியில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழகத்தின் கிராமங்களில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை திறந்த தீர்க்கதரிசி. காமராசர் கொண்டுவந்த திட்டங்களைப் பிற மாநிலங்கள் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமலப்டுத்தின என்பதிலிருந்து அவரது தொலைநோக்குப் பார்வையை அறியலாம். தலைவன் என்ற சொல்லுக்கு அனைவருக்கும் புரியும்படியான அர்த்தம் காமராசர் தான்.
ஆளுயர கட்டவுட்டுகள் வைக்காமல், அலங்கார மேடைகள் செய்யாமல், புழுதியைக் கிளப்புகின்ற நூற்றுக்கணக்கான கார்களின் அணிவகுப்பு இல்லாமல், ராணுவமோ கறுப்புப் பூனையோ பாதுகாக்காமல் ஒர் உன்னத தலைவன் தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமங்களுக்குள்ளும் நுழைந்து மக்கள் குறைகேட்டு ஆட்சி செய்தார் என்றால் இன்றைய இளைய தலைமுறை நம்புமா என்ற ஐயம்கூட எனக்கு எழுகிறது. பதவி கிடைத்தால் இறுகப் பற்றிக் பிடித்துக் கொள்வோர் மத்தியில் பதவியைத் துறந்து மக்கள் பணியாற்றச் சென்ற ஓர் அறத்துறவி.
ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒரு மனிதர், இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்து பரிபாலனம் நடத்திய ஓர் ஆளுமைச் சிற்பி, மூன்று முறை பிரதமர்களை உருவாக்கிய தலைவர் இறந்த பிறகு அவர் தங்கியிருந்தத வீட்டைச் சோதனையிட்டார்கள். அவரிடமிருந்த பணம் நூற்றம்பது கூடத் தேறவில்லை. தன் பெயரில் தனக்கென வங்கிக் கணக்கே வைத்துக் கொள்ளாத உலகின் ஒரேத் தலைவனை இந்திய நாடு கண்டு வியந்தது. இன்று சமூகப் பணியாற்றுவோருக்கு ஆன்ம சக்தியாக விளங்குபவர் காராசர்தான்.
காமராசரை படிக்காத மேதை என்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் உள்ள கோப்புகளைப் படித்து, தவறுகளைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு ஆங்கில அறிவும் புலமையும் காமராசருக்கு இருந்தது. நெருக்கடியான நேரங்களிலெல்லாம் இந்தியாவை காப்பாற்றியவர் காமராசர். ஏழை எளிய மக்களின் துயரங்களைப் போக்குவதற்காக அவர் ஏற்றுக் கொண்ட சிலுவையை மரணம் வரை அவர் கீழிறக்கவே இல்லை. இன்றைய அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான செயல் காமராசரின் புகழை உயர்த்திக் கொண்டேப் போகிறது. அவர் எந்தச் சாதிச் சிமிழுக்குள்ளும் அடங்கமாட்டார். அப்படி அடைப்பது நாம் அவருக்குச் செய்கிற அநீதி; பச்சைத் துரோகம். தாழக்கிடந்தோரை தற்காத்துத் தூக்கிய காமராசர் தேசத்தின் சொத்து”